- Details
-
Hits: 66
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் ரூ.9 லட்சத்தில் கழிவறைகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி பவுர்ணமி அன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் தீபத்திருவிழா அன்று 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகை தந்து 14 கி.மீ. தூரமுள்ள மலையை வலம் வருகின்றனர்.
தற்போது பக்தர்களின் அடிப்படை வசதிக்காக கிரிவலப் பாதையில் ஊராட்சிகள் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரின் இடைவெளி நிரப்பும் வீதியிலிருந்து கிரிவலப் பாதையிலுள்ள ஆனாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் போன்ற ஊராட்சிகள் மூலம் ரூ.9 லட்சத்து 10ஆயிரம் மதிப்பில் கழிவறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி கழிவறைக்கு அருகில் ஒரு லட்சத்தில் சிறு விசைப்பம்பு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
அடிஅண்ணாமலையில் நடைபெற்று வரும் பணியை திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ராஜாராமன், சுப்பிரமணியன், அடிஅண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த கழிவறைகள் வருகிற பவுர்ணமி முதற்கொண்டு பக்தர்களின் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படும் என்றும், அத்தியந்தலில் உள்ள கோயில் நிலத்தில் கழிவறை கடடப்படவுள்ளதாகவும் இதற்காக கோயில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.